கலெக்டர் கோவிந்தராவ் 
செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கொரோனா நிவாரண நிதி பெற காலநீட்டிப்பு - கலெக்டர் கோவிந்தராவ் தகவல்

மாற்றுத்திறனாளிகள் கொரோனா நிவாரண நிதி பெற காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

கொரோனா தொற்று காரணமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூ.1000 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி வரை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 ஆயிரத்து 700 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாற்றுத்திறனாளியும் கூட விடுபடாமல் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை கொரோனா நிவாரணநிதி பெறாத மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்று கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். அதுதவிர ஆதார் அட்டையின் நகல், 18 வயது நிரம்பியவராக இருந்தால் வாக்காளர் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றையும் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா நிவாரணநிதியானது மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலரிடம் மட்டுமே வழங்கப்படும். நிவாரணநிதி பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பபின் தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 04362-236791-ஐ தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.