கைது 
செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து - கோவை வாலிபர்கள் 3 பேர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

கோவை:

கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஷாஜகான் மகன் ஆட்டோ பைசல் என்கிற பைசல் ரகுமான் (29), கரும்புக்கடை சதாம் உசேன் (28), பீளமேடு குட்டிப்பாளையம் முகம்மது புர்கான் (26) ஆகியோர் வீடுகளில் இன்று அதிகாலை கோவை மாநகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர உதவி போலீஸ் கமி‌ஷனர்கள் வெங்கடேசன், சோம சேகர் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆட்டோ பைசல், சதாம் உசேன், முகம்மது புர்கான் ஆகியோர் சமூக வலைதளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாகவும், மற்ற மதம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்ததை பெரிய கடை போலீசார் கண்காணித்ததை தொடர்ந்து அவர்களது வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

பின்னர் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட முகம்மது புர்கான் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். அவர் கோவை பீளமேடு குட்டிப்பாளையம் பிரிவில் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி சமூக வலைதளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.