கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனியில் மத்திய அரசின் அச்சகம் உள்ளது. மிகப்பழமையான இந்த அச்சகத்தை மத்திய பிரதேச மாநிலத்திற்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த அச்சகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. பெரியநாயக்கன் பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பத்மாலயா சீனிவாசன் தலைமை தாங்கினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. (எடப்பாடி அணி) வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க.. (டி.டி.வி. தினகரன் அணி) பெரியநாயக்கன் பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முக சுந்தரம், ஆனந்தன், கணேச மூர்த்தி, காங்கிரஸ் விஜயகுமார்,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முன்னாள் எம்.பி. நடராஜன், இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்.டி.பி.ஐ., அரசு அச்சக ஊழியர்கள், அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.