கோவை:
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் தொண்டு காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் அவினாசி (80). விவசாயி.
இவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அங்குள்ள சின்னாறு பகுதிக்கு கை, கால்களை கழுவ சென்றார். அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை விவசாயி அவினாசியை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து போளூவாம் பட்டி வனசரக ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன ஊழியர்கள் மற்றும் ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஒற்றை காட்டு யானையை காட்டுக்குள் விரட்டி பலியான விவசாயி அவினாசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகள் தாக்கி மனித உயிர் இழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். #TamilNews