வடவள்ளி:
கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரத்தில் இருந்த நூற்றாண்டு பழமையான மரம் அகற்றப்பட்டது.
இதையடுத்து அந்த மரத்தை வேறு இடத்தில் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மரத்தை வெட்டினர். மாலையில் 30 டன் எடை கொண்ட மரம் லாரியில் ஏற்றப்பட் டது.
டிரைவர் லாரியை இயக்கி சிறிது தூரம் சென்ற போது திடீரென பாரம் தாங்காமல் அருகில் இருந்த வீட்டின் மீது லாரி கவிழ்ந்தது. அப்போது வீட்டில் இருந்த இந்திரா நகரை சேர்ந்த சாந்தி(வயது 53) இடுபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வடவள்ளி போலீசார் விரைந்து சென்று சாந்தியின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சாந்தியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக லாரி டிரைவர் வெங்கடேசன்(34) மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.