கோவை:
கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆதரவின்றி தவிப்போருக்கு உணவு வழங்க கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் சமுதாய சமையல் கூடம் அமைக்கப்பட்டு தினமும் 500 பேருக்கு 3 வேளை இலவச உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. வடக்கு தாசில்தார் டி.மகேஷ்குமார் தலைமையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
உணவு சமைப்பதற்காக பொதுநல அமைப்பினர், தன்னார்வலர் பலரும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறார்கள்.அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் நேற்று லாரியில் தாலுகா அலுவலகத்துக்கு வந்து இறங்கியது. உடனே தாசில்தார் மகேஷ்குமார் மற்றும் தொழிலாளர்களுடன் சேர்ந்து நிவாரண பொருட்களை லாரியில் இருந்து இறக்கினார். 75 கிலோ மற்றும் 25 கிலோ அரிசி மூட்டைகளை லாரியில் இருந்து முதுகில் தூக்கி சுமந்தபடி உணவு தயாரிக்கும் பகுதிக்கு கொண்டு சென்றார்.
தாசில்தார் அரிசி மூட்டைகளை சுமந்து சென்றது அங்கு இருந்த ஊழியர்கள் உள்பட பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. தாசில்தாரின் இந்த பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.