செய்திகள்

பெண்கள் எளிதாக வேலைக்கு சென்றுவர அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது- முதலமைச்சர் பேச்சு

பெண்கள் எளிதாக வேலைக்கு சென்றுவர அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளதாக சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மாலை மலர்

உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான கடந்த 24-ந் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா சேலம் சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

மேலும் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய அவர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-


2016 சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதியாக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் உழைக்கும் மகளிருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அம்மா பிறந்தநாளான கடந்த மாதம் 24-ந் தேதி பாரத பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேநாளில் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் அம்மா ஸ்கூட்டர் திட்டத்துக்கு 17ஆயிரம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இதில் 1004 பேருக்கு இன்று அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. அதனை நான் இன்று தொடங்கி வைத்துள்ளேன்.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 35ஆயிரம் பெண்கள் அம்மா ஸ்கூட்டர் வாங்க பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் தகுதி உள்ள அனைவருக்கும் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்.

பெண்கள் வீட்டு வேலைகளை பார்த்தாக வேண்டும். குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கும் செல்ல வேண்டும். வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு வந்து சமையல் வேலையும் பார்த்தாக வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு பெண்கள் எளிதாக வேலைக்கு சென்று வீட்டுக்கு வர அம்மா ஸ்கூட்டர் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் அறிக்கையில் ஸ்கூட்டர் திட்டத்துக்கு ரூ.20ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ரூ.5000 அதிகரித்து, ரூ.25ஆயிரம் மானியத்துடன் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது. அம்மா செய்த பணிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 1,200 அடி போர்வெல் போட்டால்தான் தண்ணீர் கிடைக்கும். ஆனால் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு வறட்சி நிதியாக ரூ.2,640 கோடி வழங்கப்பட்டு உள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.3,070 கோடி தமிழ்நாட்டிற்கு மட்டும் பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது.