முதல் மந்திரி பினராயி விஜயன் 
செய்திகள்

கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - பினராயி விஜயன்

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம்  சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதைப் பார்த்து பயந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என எண்ணி, யானையை விரட்ட அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர்.

மனிதர்கள் வழங்கிய உணவை அந்த யானை சாப்பிட்டதும் வாயில் வெடி மருந்து வெடித்தது. இதனால் அந்த கர்ப்பிணி யானைக்கு தாள முடியாத வலி ஏற்பட்டு, தண்ணீரில் நின்றபடியே தனது உயிரை மாய்த்துவிட்டது.

இந்நிலையில், கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த படுபாதக செயலை செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்.  இந்த வழக்கை வனத்துறை விசாரித்து வருகிறது. குற்றவாளிகள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.