செய்திகள்

ஒக்கி புயலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதிஉதவி: முதல்வர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒக்கி புயலினால் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம், குழித்தட்டு விளையைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் ரெத்தினசாமி, வடசேரி, வடக்கு வீதியைச் சேர்ந்த கணேசனின் மகன் தியாகராஜன் மற்றும் செங்கோடி, வாழவிளை மாத்தூரைச் சேர்ந்த முத்துமணியின் மனைவி அன்னம்மாள் ஆகிய மூன்று பேரும் பலத்த காற்றின் காரணமாக மரம் முறிந்து விழுந்து உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இணையம் புத்தன்துறையை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, புயலின் காரணமாக காணாமல் போன மீனவர்களில் சூசைய்யா மற்றும் ஜெர்மியான்ஸ் ஆகிய இரண்டு நபர்களின் சடலம் கடந்த 3-ந் தேதி கண்டெடுக்கப்பட்டது. இந்த செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.