செய்திகள்

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

காஷ்மீரில் எதிரிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாப்புப்படையின் தலைமைக் காவலர் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.#BSFJawanSuresh #EdappadiPalanisamy

சென்னை:

காஷ்மீரில் எதிரிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாப்புப்படையின் தலைமைக் காவலர் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்.எஸ் புரா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமியின் மகனும், எல்லை பாதுகாப்பு படையின் 78-வது படைப்பிரிவின் தலைமைக் காவலருமான அ.சுரேஷ், 17-ந்தேதியன்று எதிரிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, உயிரிழந்த தலைமைக் காவலர் அ.சுரேஷ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அ.சுரேசின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT