முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

பாசன வசதிக்காக ஆழியாறு அணையில் இருந்து வரும் 6-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம்போக பாசனத்திற்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட வேளாண் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் மக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு 6.11.2020 முதல் 15.4.2021 முடிய 160 நாட்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து 1137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6,400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.