சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக ராதாபுரம் கால்வாய்க்கு 27.9.2019 முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 75 கனஅடி வீதம் மொத்தம் 194.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.