முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இன்று பேசும் போது கூறியதாவது:-
இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என்று சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் நீதிமன்றம் இந்த தடையை அகற்றியுள்ளது.
இதனால் கோர்ட்டு மூலம் நமக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம். எனவே நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
சிலர் நம்மை அழித்து விடலாம், விரட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது.
அரசியல் வரலாற்றில் பிரிந்த இயக்கங்கள் ஒன்று சேர்ந்ததாக வரலாறு இல்லை. ஆனால் நாம் ஒன்று சேர்ந்து இருக்கிறோம்.
ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. ஆனால் அ.தி.மு.க. மட்டும்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்த சாதனையை படைத்துள்ளது.
ஒரு தினகரன் அல்ல ஓராயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத தினகரனால் எப்படி நிர்வாகிகளை நீக்க முடியும்?
கடந்த 10 ஆண்டுகளாக தினகரன் எங்கே சென்றார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தினகரன். அவர் எங்களை பார்த்து துரோகி என்கிறார். எனவே யார் நினைத்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.