முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

மாலை மலர்

சென்னை:

சென்னையை அடுத்த முகலிவாக்கம் தனம்நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் தீனா(14). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில், அந்த இடத்தை கடந்தபோது மாணவன் தீனா மின்சாரம் தாக்கி பலியானான்.

இதேபோல் தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் சாரங்கன் அவென்யூ கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சேது (42). அதே பகுதியில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவர் மின்கம்பத்தில் இருந்த வயர்கள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து இறந்த தீனா மற்றும் சேது ஆகியோரின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.