செய்திகள்

கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர்

கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் செல்வி லோகேஸ்வரி என்பவர் 12.7.2018 அன்று கல்லூரியில், பயிற்சியின் போது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த யோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணாக்கர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரி கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.