செய்திகள்

ஒக்கி புயலால் மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் மீட்பு: முதல் மந்திரி பட்னாவிஸ்

ஒக்கி புயலில் சிக்கி மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஒக்கி புயலில் சிக்கி மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்கி புயல் தாக்கியபோது கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் ஏராளமான மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் புயலில் சிக்கி மாயமானதாக அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழகம் மற்றும் கேரளா மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மீனவர்களை தேடும் பணியில் மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்ய தயார் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒக்கி புயலில் சிக்கி மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய மாநில கடல் பகுதியில் 66 கேரள படகுகள் மற்றும் 2 தமிழக படகுகளுடன் 952 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். மேலும், பருவநிலை சரியானதும் மீனவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கடலில் மாயமான 198 தமிழக மீனவர்கள் 18 படகுகளுடன் லட்சத்தீவு அருகே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.