செய்திகள்

புயலால் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல்: ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

புயலால் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததுடன், ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் அந்தோணிதாசன் என்பவரின் மகன்

ஆன்றனி ராஜ் என்பவர் விசைப்படகில், கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கடலுக்கு சென்று மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, 30.11.2017 அன்று பெய்த பெருமழை மற்றும் ‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது ‘ஒக்கி’ புயல் காரணமாக உயிரிழந்த ஆன்றனி ராஜ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஆன்றனி ராஜ்  குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.