சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்தில், தனிப்பிரிவு முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த செபஸ்டியனின் மகன் ஜெகதீஷ் துரை பணியிலிருந்தபோது, டிராக்டர் வாகனத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்தார். இந்த செய்தியை அறிந்து துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்த முதல்நிலை காவலர் ஜெகதீஷ் துரையின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
கடமை உணர்வுடன் பணியாற்றியபோது தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழந்த முதல்நிலைக் காவலர் ஜெகதீஷ் துரையின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரது தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கவும், கடமையாற்றிக் கொண்டிருந்தபோது உயிர் இழந்த அவரது குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.