போபால்:
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரை பறித்து வரும் ‘புளூவேல்’ (நீல திமிங்கலம்) ஆன்லைன் விளையாட்டின் விளைவுகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம், மராட்டியம், மத்திய பிரதேசம் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பலர் இந்த விளையாட்டுக்கு பலியாகி இருக்கின்றனர்.
மத்திய பிரதேச தலைநகரான போபாலில் மில் நடத்தி வரும் கான் என்பவரின் மகனான நவுமான் (வயது 15) அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். தற்கொலையை தூண்டும் நீல திமிங்கல விளையாட்டில் அவன் பங்கேற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நவுமானின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அதை நவுமானின் உறவினர்களிடம் ஒப்படைத்த அவர்கள், அதில் நீல திமிங்கலம் விளையாடியதற்கான தடயம் எதுவும் இல்லை என தெரிவித்தனர். எனினும் இது குறித்து அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.