செய்திகள்

ஆந்திராவில் 9 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்

ஆந்திராப்பிரதேசம் மாநிலத்தில் 9 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #AndhraPradesh #mauledtodeath #straydogs

மாலை மலர்

ஐதராபாத்:

இந்தியாவில் தெரு நாய்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அதுபோன்ற சம்பவம் ஒன்று ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பாலாஜிபேட் பகுதியில் ஜஸ்வந்த் என்ற 9 வயது சிறுவன் சாலையில் நடந்து சென்றுள்ளான். அப்போது அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அச்சிறுவனை பார்த்து குறைத்துள்ளன. இதனால் பயந்துபோன சிறுவன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சித்துள்ளான்.

இதனையடுத்து அந்த சிறுவனை துரத்தி சுற்றி வளைத்த தெரு நாய்கள், சரமாரியாக கடித்து குதறியுள்ளன. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுவனை நாய்களிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜஸ்வந்த்தை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

9 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #AndhraPradesh #mauledtodeath #straydogs #tamilnews