செய்திகள்

3-ம் வகுப்பு மாணவனை 40 தடவை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில், வருகைப் பதிவேட்டில் பெயரை வாசிக்கும் போது பதில் கூறாததால் 3-ம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவனின் பெற்றோர் தனது மகனை வகுப்பு ஆசிரியை அடித்ததாக பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சிசிடிவி கேமராவை பார்த்ததில் ஆசிரியை, மாணவனின் கன்னத்தில் கருணையின்றி மாறி மாறி 40 தடவைக்கு மேலாக அடித்தது தெரியவந்தது.

இது குறித்து ஆசிரியையிடம் விசாரணை நடத்தியதில் வகுப்பில், வருகைப் பதிவேட்டிற்காக மாணவனை அழைத்த போது கவனிக்காமல் இருந்ததால் கன்னத்தில் அறைந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி முதல்வர் அந்த ஆசிரியையை அழைத்து விசாரித்தார். அப்போது, அவர் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என  மாணவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆசிரியை மீது மாணவனை காயப்படுத்திய குற்றத்திற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் ஆசிரியை மாணவனை அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.