ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நேற்று, பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் மசூதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், மற்றும் ஹூரியத் மாநாட்டு அமைப்பின் இரு பிரிவின் தலைவர்கள் கிலானி மற்றும் மிர்வாய்ஸ் உமர் பருக் உள்ளிட்டோர் பக்ரீத் தொழுகையில் பங்கேற்க போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஸ்ரீநகர், அனந்த்நாக், சோப்பூர் உள்ளிட்ட பகுதியில் பக்ரீத்தையொட்டி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீநகரில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய சில இளைஞர்கள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது போன்று அனந்த்நாக்கின் ஜன்கிலாத் மண்டி, சோப்பூர் அருகே ஜமியா மசூதி பகுதியிலும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால், பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை.