புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் விதித்த தடையை மீறி, மாணவர்களை சேர்த்துக்கொள்ள மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்ததாக அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சுக்லா மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய இந்த குழு, சுக்லா மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுக்லா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெற வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால், தன் மீதான புகார்களை மறுத்த நீதிபதி சுக்லா, பதவி விலகவும் மறுத்து விட்டார்.
இதையடுத்து, சுக்லாவுக்கு நீதித்துறை சார்ந்த எந்த பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளார். எனவே, அவருக்கு எந்த பணிகளும் ஒதுக்கீடு செய்யவில்லை.
ஐகோர்ட் நீதிபதி ஒருவரை பாராளுமன்றம் தான் பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதால், சுக்லாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதிக்கு தலைமை நீதிபதி கடிதம் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் சுக்லா பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மருத்துவ சேர்க்கை முறைகேடு தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது. #tamilnews