செய்திகள்

திருவிதாங்கோட்டில் மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்

தக்கலை அருகே திருவிதாங்கோடு நடுக்கடை சந்திப்பில் மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

தக்கலை:

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக இன்னும் பல பகுதிகளில் மின் வினியோகம் சீராகவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று தக்கலை அருகே திருவிதாங்கோடு நடுக்கடை சந்திப்பில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தக்கலை, திருவிதாங்கோடு, கேரள புரம், வட்டம், கோழிப்போர் விளை, அமராவதி, செட்டியார் விளை போன்ற கிராமங்களில் 7 நாட்களாக மின்சாரம் வினியோகம் நடைபெறாததை கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடந்தது.

ஆண்களும், பெண்களும் இணைந்து கோ‌ஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திங்கள்சந்தை- அழகியமண்டபம், தக்கலை- கருங்கல் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு ஆதரவாக தி.மு.க.வைச் சேர்ந்த சுகுமாரன், கம்யூனிஸ்டு, சைலஸ், எஸ்.டி.பி.ஐ. சுல்பிகர் அலி மற்றும் அரசியல் கட்சியினரும் அங்கு திரண்டனர்.

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.