செய்திகள்

வீராணம் ஏரியில் கருப்பு நிறத்தில் தண்ணீர் பொங்குவதால் பரபரப்பு: பொதுமக்கள் பீதி

வீராணம் ஏரியில் தென்ரெட்டை மதகு அருகில் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கருப்பு நிறத்தில் தண்ணீர் பொங்குவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.55 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 598 கன அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக 430 கன அடி தண்ணீரும், சென்னை மெட்ரோ குடிநீருக்கு 68 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

வீராணம் ஏரியில் தென்ரெட்டை மதகு அருகில் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கருப்பு நிறத்தில் தண்ணீர் பொங்கி வருகிறது. அந்த இடத்தை சுற்றி எண்ணை படலம் போல் படர்ந்து உள்ளது. தண்ணீர் சூடாக உள்ளது. மேலும் 15 நாட்களாக இவ்வாறு தண்ணீர் பொங்கி வருகிறது.

 வீராணம் ஏரியில் தண்ணீர் பொங்குவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதனையடுத்து தண்ணீர் பொங்கும் பகுதியில் அதை தடுக்கும் விதமாக மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் அடுக்கினர், அதையும் மீறி தண்ணீர் பொங்கிய படியே உள்ளது. இதனால் பொது மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

SCROLL FOR NEXT