செய்திகள்

காஷ்மீர்: மனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற கான்ஸ்டபிள் கைது

காஷ்மீரில் தனது மனைவி உட்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கான்ஸ்டபிளை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கித்துவார் மாவட்டத்தில் இங்கலப்பா ஸ்ரீதர் என்பவர் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப். குடியிருப்பில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது ஸ்ரீதரின் மனைவி லாவண்யா, மற்றொரு பாதுகாப்பு படை வீரர் ராஜேஷ் கிகானே மற்றும் அவரின் மனைவி ஷோபா ஆகிய மூவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அவர்கள் மூவரையும் ஸ்ரீதர் தனது துப்பாக்கியால் சுட்டு கொன்ற உண்மை தெரிய வந்தது.

 
இதையடுத்து இங்கலப்பா ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியை கைப்பற்றினர். ஸ்ரீதர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் கட்ட விசாரணையில் ஸ்ரீதரின் மனைவிக்கும், அவர் உடன் பணியாற்றும் ராஜேஷிற்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது.