செய்திகள்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை - அமலாக்கத்துறை தகவல்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை என கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #RajeevSaxena

மாலை மலர்

புதுடெல்லி:

மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் (அகஸ்டாவெஸ்ட்லேண்ட்) வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.3,600 கோடி முறைகேடாக பணபரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டு, சமீபத்தில் உடல்நலக்குறைவால் ஜாமீன் பெற்றுள்ளார்.

கடந்த 6-ந்தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையில் சக்சேனா அப்ரூவராக விரும்புவதாக வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதி அரவிந்த்குமாருக்கு அனுப்பப்பட்டது. டெல்லி கோர்ட்டு இதுபற்றி அமலாக்கத்துறையின் கருத்தை கேட்டது. கோர்ட்டில் இன்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை. அது அமலாக்கத்துறைக்கு உதவியாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 25-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.