செய்திகள்

ஹெல்மெட் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

சித்தூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கே பெட்ரோல் போடப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரபாபு கூறினார்.

மாலை மலர்

ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தவிர்ப்பு குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சித்தூரில் நடந்த இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரபாபு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும். இதன் மூலம் விபத்துகளில் உயிரிழப்புகள் குறையும்.

சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகம். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டால் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள் தலையில் காயம் அடைந்து இறப்பது தொடர்கிறது.

எனவே ஹெல்மெட் அணிந்து சென்றால் மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த வி‌ஷயத்தில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.