வாஷிங்டன்:
வடகொரியா தொடர்ந்து நடத்திவரும் அணுஆயுத சோதனைகள் மூலம் உலக அளவில் அச்சுறுத்தும் நாடாக வளர்ந்துவருவதை சீனா உணர்ந்துவிட்டது என அமெரிக்க வெளியுறவுத்துறையின் கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான துணை செயலாளர் சூசன் தார்ன்டன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாது:-
வடகொரியாவின் 90 சதவிகித பொருளாதாரம் சீனாவை நம்பியே உள்ளதால் மற்ற நாடுகளை விட வடகொரியா மீது சீனாவிற்கு அதிக அதிகாரம் உள்ளது. சீனா நினைத்தால் வடகொரியாவிற்கு அதிக அழுத்தம் கொடுத்து அந்நாடு நடத்திவரும் அணுஆயுத சொதனைகளை தடுத்து நிறுத்தமுடியும். இது தொடர்பாக சீனாவுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்திவருகிறது.
வடகொரியாவின் நடவடிக்கைகளை சீனா கவனித்து வருகிறது. அதன்மூலம் சீனாவின் சொந்த பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதை சீனா உணர்ந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.
கொரிய தீபகற்பத்தில் எந்த பிரச்சனைகளும் நிகழாமல் தடுப்பதையே அமெரிக்கா மற்றும் சீனா கொள்கையாக கொண்டுள்ளது. எனவே இந்த பிரச்சனையில் இரு நாடுகளும் இணைந்து ஒரு நல்ல தீர்வை காண வேண்டும்.
ஆசிய - பசிபிக் பகுதி பிரச்சனைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபாடு காட்டும். அப்பகுதியில் பாதுகாப்பு அளிப்பதில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தும். அதுவே நமது செழிப்புக்கும், நமது பொருளாதார எதிர்காலத்திற்கும் முக்கியமானது. அதில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தும்.
பல உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் இந்த பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து நடத்திவரும் பேச்சுவார்த்தைகளை பார்த்துள்ளீர்கள் என்று நான் நினைக்கிறேன். எங்கள் செயலில் ஈடுபாடு வெளிப்படையாக தொடர்கிறது என்று நான் நினைக்கிறேன். இதை எப்போதும் மாற்றப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரச்சனையில் வடகொரியாவிற்கு அதிக அழுத்தம் கொடுத்து அந்நாடு நடத்திவரும் அணுஆயுத சோதனைகளை தடுப்பதற்காக அமெரிக்கா தனது விமானந்தாங்கி கப்பலில் வீரர்களை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பியுள்ளது.