செய்திகள்

பிரம்மபுத்திரா நீரை திருட சுரங்கம் கட்டும் திட்டமா?: சீனா மறுப்பு

பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்துக்கு தண்ணீரை திருப்பிவிட ஆயிரம் கி.மீ. நீளத்தில் புதிய சுரங்கப்பாதை அமைப்பதாக வந்த தகவல்களை சீனா மறுத்துள்ளது.

மாலை மலர்

பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து சீனாவின் வறட்சி பகுதியான ஜிங்ஜியாங் பகுதியில் உள்ள டக்லமக்கான் பாலைவனப் பகுதியில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. திபெத் பகுதி வழியாக ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை சீனப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டது.

தெற்கு திபெத்தில் உள்ள புராங் பகுதியில் உருவாகி, இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் வழியாக கடலில் கலப்பதற்கு முன்னர் வங்காளதேசத்தில் உள்ள மக்களுக்கு இந்த ஆற்றின் தண்ணீர் பயன்படுகிறது. சீன அரசின் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் பிரம்மபுத்திரா ஆற்றை நம்பி உள்ள நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கருதப்பட்டது.

மேலும், சுரங்கப்பாதை அமைக்கப்படும் போது மலைகள் வெட்டப்பட வேண்டும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நீண்டகால உழைப்பு தேவைப்படும் இந்த திட்டத்திற்கு அதிகப்படியான நிதி தேவைப்படும் நிலை உள்ளது. சராசரியாக 150 பில்லியன் டாலர் செலவாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியை சீன அரசு இன்று மறுத்துள்ளது. இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்படி பத்திரிகை செய்தியில் உள்ள தகவல்கள் உண்மையல்ல. அந்த செய்தி முற்றிலும் தவறானது. எல்லைகளுக்கிடையிலான நதி பங்கீட்டு விவகாரங்களில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு சீனா எப்போதுமே முக்கியத்துவம் அளித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.