கோப்பு படம் 
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக மாறிய 12 வயது சிறுவன்- திருமண விழா தாக்குதலில் 6 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று திருமண விழாவின்போது 12 வயது சிறுவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நங்கர்ஹார் மாகணத்துக்கு உட்பட்ட பச்சீர்வா ஆகம் என்ற பகுதியில் மாலில் தோர் என்பவர் வீட்டில் இன்று ஒரு திருமண விழா நடைபெற்றது.

அப்போது அந்த திருமண விழாவுக்கு வந்த 12-வயதுடைய சிறுவன் தனது உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை திடீரென வெடிக்க செய்தான். இந்த கோர தாக்குதலில் மாலிக் தோர் உட்பட 6 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான மாலிக் தோர் தலிபான் இயக்கத்துக்கு எதிரான அரசுப் படைகளின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் பச்சீர்வா ஆகம் பகுதியில் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அவர்களே இத்தகைய தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்றி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SCROLL FOR NEXT