முதல்வர் பழனிசாமி 
செய்திகள்

குழந்தை சுர்ஜித்தை மீட்க தேவையான உதவிகள் செய்யப்படும்- முதல்வர் பழனிசாமி

மனப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க தேவையான உதவிகள் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். 

சிறுவனை மீட்கும் பணிகள் நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘வீரமிக்க சிறுவன் சுர்ஜித் வில்சனுடன் எனது பிரார்த்தனைகள் இணைந்துள்ளது. ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். சிறுவனை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்:- 

மீட்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடம் மீட்பு குழுக்கள் 3 அமைச்சர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். என்எல்சி, ஓஎன்ஜிசி, எல் அண்ட் டி நிபுணர்களின் ஆலோசனையின் படி மீட்புப் பணி நடக்கிறது. சுர்ஜித்தை மீட்க தேவைப்பட்டால் மேலும் உதவிகள் செய்ய அரசு தயாராக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT