புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த முதலமைச்சர் 
செய்திகள்

கொரோனா தடுப்பு பணிக்கு தமிழக தீயணைப்பு துறையில் துரித செயல் வாகனங்கள்- முதல்வர் துவக்கி வைத்தார்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக தீயணைப்புத் துறைக்கு வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் மருத்துவத் துறையினருடன், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை பரிசோதனை செய்வது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கான ஒவ்வொரு பகுதியிலும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தினமும் பொதுமக்களின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக நேரடியாக  விசாரித்து வருகின்றனர். 

இதேபோல் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக தீயணைப்புத் துறைக்கு புதிதாக 50 துரித செயல் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த துரித செயல் வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.