சேலம்:
ஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு காரில் சேலத்திற்கு வந்தார்.
அப்போது மாவட்ட எல்லையான சங்ககிரியில் கலெக்டர் ரோகிணி பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். பின்னர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வந்த எடப்பபாடி பழனிசாமியை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார்.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலேசானை நடத்தினார். இதில் பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாச்சலம், சக்திவேல், சின்னதம்பி, வெற்றிவேல், சித்ரா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், ஜெ.பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் சரவணமணி, பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவமூர்த்தி மற்றும் பிரகாஷ், தொழிற்சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன், ஜான்கென்னடி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் நிலவரம் குறித்தும், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், 12-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வருவது பற்றியும், சேலம் மாவட்டத்தில் நடை பெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி அணி-ஓ.பன்னீர்செல்வம் அணி இணைப்பிற்கு பிறகு திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 27-ந் தேதி சேலத்திற்கு வந்தார்.
அப்போது செம்மலை எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அவர் சந்திக்காததால் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் செம்மலை இருப்பதாகவும் தினகரன் அணிக்கு அவர் செல்ல இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் அவர் அதனை மறுத்தார்.
இந்தநிலையில் நேற்று சேலம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, செம்மலை எம்.எல்.ஏ. சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கட்யினரிடையே எழுந்தது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ் உள்பட தனது ஆதரவாளர்களுடன் வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 10 நிமிடம் சந்தித்து பேசினார். அப்போது மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர், செம்மலையுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் புறப்பட்டு சென்றார்.முதல்வர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.