செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 2-ந்தேதி நடக்கிறது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 2-ந் தேதி நடக்கிறது.

மாலை மலர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோவில் கொடி மரத்தில் மேளதாளம் முழங்க, வேதமந்திரங்கள் ஒலிக்க உற்சவ ஆச்சாரியர் கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைக்கிறார்.

இதனைத்தொடர்ந்து கோவில் உள் மற்றும் வெளிபிரகாரங்களில் பஞ்சமூர்த்தி வீதிஉலா நடக்கிறது.

தொடர்ந்து தினமும் பகல் மற்றும் இரவில் உற்சவர்கள் சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி தேர்த்திருவிழாவும், 2-ந்தேதி நண்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. 3-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு வீதிஉலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.