செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்தை படம்பிடிக்க முயன்ற போலீஸ்காரர் செல்போனை பறித்த தீட்சிதர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை படம்பிடிக்க முயன்ற போலீஸ்காரர் செல்போனை தீட்சிதர் பறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

சிதம்பரம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை ஆனித்திருமஞ்சன திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் தேரோட்டத்தை தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றார். இதைபார்த்த தீட்சிதர், செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என கூறினார். திடீரென அவர் அந்த போலீஸ்காரரிடமிருந்து செல்போனை பறித்ததாக தெரிகிறது.

இதனால் அவர்களுக் கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பறிக்கப்பட்ட செல்போன் போலீஸ்காரரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.