செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தரை முற்றுகையிட்ட அதிகாரிகள்

ஊதிய குறைப்பை கண்டித்து அதிகாரிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

சிதம்பரம்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஏற்றது. பின்னர் பல்கலைக்கழகத்தில் அதிகப்படியான செலவினங்களை குறைப்பது, ஆட்கள் மற்றும் ஊதிய குறைப்பு நடவடிக்கையில் அரசு நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இதையொட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள ஏராளமான ஊழியர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

நிதி நெருக்கடியை குறைக்க தற்போது ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் பல்கலைக்கழக படிப்பு மைய அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரிகள் சங்கம் சார்பில் ஊதிய குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய குறைப்பை கண்டித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்துக்கு சென்று துணை வேந்தர் மணியனை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.