சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வாளகத்தில் மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம். 
செய்திகள்

மாணவி அனிதா தற்கொலை: சிதம்பரம்- கடலூரில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

மாணவி அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் சிதம்பரம்- கடலூரில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

சிதம்பரம்:

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் மற்றும் கலைத்துறை மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்யகோரி போராட்டங்களை நடத்தினர்.

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. தகவல் அறிந்து வந்த தேவனாம்பட்டினம் போலீசார் போராட்டம் நடத்திய மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.