செய்திகள்

பிரபல நிழல் உலக தாதா சோட்டா ஷகீல் கூட்டாளி டெல்லியில் கைது

ஆள் கடத்தல், கொலை, கொள்ளைக்கு பேர்போன பிரபல நிழல் உலக தாதா சோட்டா ஷகீல் கூட்டாளியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு வம்சாவளி எழுத்தாளர் டரேக் பத்தா. இவரது படைப்புகள் மீது அதிருப்தியடைந்ததால் டரேக் பத்தாவை கொல்வதற்கு சோட்டா ஷகீலின் கூட்டாளி ஜுனைத் சவுத்ரி என்பவர் திட்டமிட்டு வருவதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வடகிழக்கு டெல்லியில் உள்ள வசிராபாத் சாலையில் அவரை டெல்லி சிறப்புப் படை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் விபரம் எதையும் குறிப்பிடாத போலீசார் அந்த விபரங்களை ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சோட்டா ஷகீலுக்காக ஹவாலா பணத்தை கைமாற்றும்போது டெல்லி போலீசார் இவரை முன்னர் கைது செய்தனர். பின்னர் நான்கு மாதங்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலையான ஜுனைத் சவுத்ரி சோட்டா ஷகீலை சந்தித்ததால் மீண்டும் கைதானார்.

அதன் பின்னரும் ஜாமினில் விடுதலையான இவர் கூலிக்காக ஆள் கடத்துவது, கொலை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது, பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு வம்சாவளி எழுத்தாளர் டரேக் பத்தாவை கொல்வதற்கு திட்டம் தீட்டிவந்த நிலையில் டெல்லி போலீசார் இவரை மீண்டும் கைது செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.