சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு தேவிகாபுரம் வம்பலூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 49). தேவிகாபுரத்தில் அச்சகம் நடத்தி வந்தார். இவருக்கு விருதாம்பாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கர் அச்சகம் நடத்தி வரும் தேவிகாபுரத்திலேயே வீடு வாடகைக்கு எடுத்து தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த 20-ந்தேதி இரவு அச்சகத்தை பூட்டி விட்டு பைக்கில் வீடு திரும்பிய சங்கர், போளூர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையையொட்டி உள்ள மலைக்குன்றில் கழுத்தறுக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார்.
சேத்துப்பட்டு போலீசார் உடலை மீட்டனர். கொலையாளிகளை பிடிக்க போளூர் டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலையுண்ட சங்கரின் செல்போன் திருடு போய் இருந்தது. அச்சகத்தில் ஆய்வு நடத்தியதில் 10 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டது. சங்கர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சங்கர் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒரு சிறுவனின் சகோதரியை சங்கர் தவறாக பேசியதால் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். #Tamilnews