செய்திகள்

செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா ஷில்லாங்கில் நவம்பர் மாதம் தொடக்கம்

மேகாலாயா மாநிலம் ஷில்லாங்கில் அடுத்த மாதம் செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா தொடங்க இருப்பதாக முதல்-மந்திரி முகுல் எம். சங்மா தெரிவித்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மேகாலயா முதல்-மந்திரி முகுல் சங்மா மற்றும் ஐ.பி.எஸ்.டீ. இயக்குநர் தீனபந்து சாகு செர்ரி மலர் திருவிழா குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது முகுல் சங்மா கூறியதாவது:-

மேகாலாயாவின் தலைநகரான ஷில்லாங்கில் அடுத்த மாதம் செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா தொடங்க உள்ளது. சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இது வசந்தக்காலம் தொடங்குவதற்கான அடையாளமாகும்.

இந்தியா மற்றும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேகாலாயாவின் அழகை காண வர வேண்டும். செர்ரி பூக்களை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் ஜப்பான், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு செல்ல வேண்டாம். தற்போது இந்தியாவிலே செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா நவம்பர் மாதம் 8-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இவ்வாறு முகுல் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.