திருவட்டார்:
குலசேகரம் பகுதியை சேர்ந்த நர்சிங் படித்த இளம்பெண் ஒருவருக்கும், குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தனர். அந்த வாலிபர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக உள்ளார்.
இதைத் தொடர்ந்து திருமண நிச்சயதார்த்தமும் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. அப்போது திருமணத்தின் போது வரதட்சணையாக நகை, பணம் கொடுப்பது பற்றி பேசப்பட்டது.
அதன்படி ரூ.10 லட்சம் மதிப்பு உள்ள நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் மணமகன் வீட்டாரிடம் கொடுக்கப்பட்டது. திருமணத்தை ஜனவரி மாதம் 8-ந்தேதி (இன்று) நடத்தவும் நாள் குறிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்குவது, திருமணத்திற்கு மண்டபம் முன்பதிவு செய்வது உள்பட அனைத்து திருமண ஏற்பாடுகளையும் இருவீட்டாரும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு ஒரு மர்ம போன் வந்தது. அந்த போனில் பேசிய பெண், தான் சென்னையில் இருந்து பேசுவதாக கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும் மணமகன் பற்றி பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் கூறினார்.
மணமகன் ஒரு ஏமாற்றுக்காரர் என்று குற்றம்சாட்டிய அந்த பெண், தன்னை அவர் ஏற்கனவே காதலித்ததாகவும், அவரது காதலை உண்மை என்று நம்பி பல இடங்களுக்கும் அவருடன் சென்றுவந்ததாகவும் தெரிவித்தார்.
அப்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் இப்போது மற்றொரு திருமணத்திற்கு தயாராகி வருவதால் ஏமாந்துவிடாதீர்கள் என்று கூறினார்.
மேலும் சென்னை பெண் தானும், மணமகனும் நெருக்கமாக இருந்த போது எடுத்த புகைப்படங்கள் தன்னிடம் ஆதாரமாக உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த புகைப்படங்களையும் வாட்ஸ்-அப் மூலம் மணப்பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த புகைப்படங்களை பார்த்த மணப்பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். மேலும் அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் உடனடியாக திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றும் உறுதியாக கூறிவிட்டார்.
ஆனாலும் பெண் வீட்டார் சென்னை பெண் கூறிய தகவலை உறுதி செய்து கொள்வதற்காக மணமகன் பற்றி மீண்டும் தீவிரமாக விசாரித்தனர். அதுபற்றி மணமகன் வீட்டாரிடம் கூறிய போது முதலில் ஆத்திரம் அடைந்த அவர்கள் போட்டோக்களை காண்பித்ததும் அமைதியாகி விட்டனர்.
இதைத் தொடர்ந்து திருமண நிச்சயத்தின் போது மணமகன் வீட்டாரிடம் வழங்கிய ரூ.5 லட்சம் வரதட்சணை பணத்தை உடனே தரும்படி பெண் வீட்டார் கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணப்பெண் குலசேகரம் போலீசில் இதுபற்றி புகார் அளித்தார்.
குலசேகரம் போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வரதட்சணை பணம் ரூ.5 லட்சத்தை கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். தங்களால் உடனடியாக முழு பணத்தையும் கொடுக்க இயலாது என்றும், முதல் கட்டமாக ரூ.2 லட்சம் கொடுப்பதாக கூறி அந்த பணத்தை கொடுத்தனர்.
மேலும் 15 நாட்களுக்குள் மீதி உள்ள ரூ.3 லட்சத்தையும் திரும்ப கொடுத்துவிடுவதாக உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் இரு வீட்டாரிடமும் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இன்று நடக்க இருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது. இதுபற்றிய தகவல் உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மணமகன் மீது எழுந்த புகாரை தொடர்ந்து இன்று நடக்க இருந்த திருமணத்தை, மணப்பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் குலசேகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.