செய்திகள்

பெரிய கட்டர் எந்திரம் மூலம் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று மீண்டும் இடிப்பு

தீ விபத்தில் முற்றிலும் சேதம் அடைந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையை பெரிய கட்டர் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

மாலை மலர்

சென்னை:

தி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் கடந்த 31-ந்தேதி தீ பிடித்தது. 2 நாட்களாக எரிந்த தீயில் கடை முற்றிலும் சேதம் அடைந்தது.

இதையடுத்து ஆபத்தான அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 2-ந்தேதி முதல் பொதுப் பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நடந்து வருகிறது.

கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் சுற்றளவு ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டு ஆட்களை நடமாட விடவில்லை.

உஸ்மான் ரோடு மேம்பாலத்திலும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10-ந்தேதி இடிப்பு பணி நடந்த போது சரத் குமார் என்ற கிரேன் ஆபரேட்டர் உயிரிழந்தார்.

இதனால் 2 நாட்கள் இடிப்பு பணி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 4 நாட்களாக இடிபாடுகள், கம்பிகளை பிரித்து அகற்றும் பணி நடந்தது.

இன்று காலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிப்பு பணி மீண்டும் தொடங்கியது.

காலை 9.58 மணிக்கு கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அருகில் மூடப்பட்டு இருந்த வங்கி கட்டிடத்தின் மீது கட்டிடம் சரிந்து விழுந்தது.

கட்டிடத்தை இடிப்பதற்கு பெரிய கட்டர் எந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த எந்திரம் செல்வதற்கு வழிகள் ஏற்படுத்தப்பட்டன.

இதையடுத்து இடிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 15 நாட்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.