சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் எஞ்சி நிற்கும் பாகத்தை படத்தில் காணலாம். 
செய்திகள்

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி இன்று நிறைவு பெறுகிறது

தீப்பிடித்து 20 நாட்கள் ஆன நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி இன்று நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் கட்டிடம் உருக்குலைந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக கட்டிடம் இடிக்கும் பணி நடந்தது.

நேற்று 18-வது நாளாக கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது. நேற்று கட்டிடத்தை முழுமையாக இடித்து தரைமட்டமாக்க திட்டமிடப்பட்டது. இதற்காக காலை 9 மணிக்கு இந்த பணி தொடங்கியது. கட்டிடத்தின் 7-வது மாடியில் உள்ள சமையல் கூடம் மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டிருக்கும் கட்டிட பகுதியைத் தவிர்த்து மீதமுள்ள கட்டிட பகுதிகள் நேற்று மதியம் இடிக்கப்பட்டன. கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த வாட்டர் டேங்கும் ஜா கட்டர் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.

சமையல் கூடம் மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டிருக்கும் கட்டிட பகுதியை இடிக்கும் போது ஒட்டுமொத்தமாக கட்டிடம் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு இருப்பதால் ஜா கட்டர் எந்திரத்தை சற்று தொலைவில் வைத்தே கட்டிடத்தை இடிக்க வேண்டியது உள்ளது.

இதனால் ஜா கட்டர் எந்திரத்தை சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தி பணியை மேற்கொள்வதற்காக பள்ளமாக இருந்த பகுதியை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அந்த பணி முழுமை அடைய மாலை 6 மணி ஆகி விட்டது. இதனால் திட்டமிட்டபடி கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று நிறைவடையவில்லை.

இதைதொடர்ந்து இன்று காலை தொடங்கி உள்ளது. தீப்பிடித்து 20 நாட்கள் ஆன நிலையில் இன்று மதியத்துக்குள் கட்டிடம் இடிக்கும் பணி நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.