செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் பெண்களை வழிமறித்து 5 இடங்களில் நகை பறிப்பு

சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 பெண்களிடம் 50 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Jewelrysnatch

மாலை மலர்

சென்னை:

சென்னை நகர், புறநகர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் மற்றொருபுறம் நகை பறிப்பில் ஈடுபடும் மர்ம கும்பல் எந்தவித அச்சமும் இன்றி கைவரிசை காட்டி தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

சென்னையில் நேற்று காலை ஒரே நாளில் 3 மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 பெண்களிடம் 50 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசோக் நகர் 7-வது அவென்யூவை சேர்ந்தவர் வசுந்தரா. நேற்று காலை 7 மணி அளவில் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள வசுந்தரா அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு  கேமிராவில் பதிவாகி உள்ளது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் தியாகராயநகர், பாண்டி பஜாரில் ஸ்ரீமதி என்பவரிடம் 11 பவுன் நகையை பைக்கில் வந்த மர்ம கும்பல் பறித்தனர்.

இதேபோல் கே.கே.நகர், வன்னியர் தெருவில் பாத்திமா என்பவரிடம் 10 பவுன் நகை, வளசரவாக்கத்தில் சாந்தகுமாரியிடம் 9 பவுன் நகை அண்ணாநகர், 10-வது மெயின் ரோட்டில் ஜெசி மனோகரன் என்பவரிடம் 5 பவுன் நகையையும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துள்ளனர்.

இந்த 5 நகை பறிப்பு சம்பவங்களும் காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அடுத்தடுத்து நடந்துள்ளது. எனவே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

நகை பறிப்பு சம்பவத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Jewelrysnatch