செய்திகள்

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி சேலம் கோர்ட்டில் இன்று சரண்

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் இன்று சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மாலை மலர்

சேலம்:

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராதா என்ற ராதாகிருஷ்ணன் (வயது45). மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு வந்து விட்டார். இவர் சென்னை புழல் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி ஆவார்.

கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, ஆள் கடத்தலில் ஈடுபடும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். ரவுடி பினு இந்த தொழிலில் நம்பர் ஒன்-னாக இருந்தபோது உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அந்த நேரம் பார்த்து சிறையில் உள்ள நாகேந்திரனின் அறிவுரையை கேட்டு ராதாகிருஷ்ணன் நம்பர் ஒன் இடத்துக்கு வந்தார். இவரை கொலை செய்வதற்காக ரவுடி பினு திட்டம் தீட்டி இருந்தார். இந்த நிலையில் தான் பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் ரவுடி பினுவின் கூட்டாளிகள் 75 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பினு பின்னர் போலீசில் சரண் அடைந்தார்.

இந்த நிலையில் பினுவின் எதிரியான ரவுடி ராதாகிருஷ்ணன் இன்று சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அவர் சரண் அடைந்தது குறித்து சென்னை போலீசாருக்கு சேலம் மாநகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை போலீசார் விரைவில் ரவுடி ராதாகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். #tamilnews