செய்திகள்

சென்னையில் மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: ம.தி.மு.க.வினர் கைது

மலேசியாவிற்குள் நுழைய வைகோவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வராக உள்ள பேராசிரியர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு வரும் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அழைப்பின் பேரில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று நள்ளிரவு 11.55 மணியளவில் சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றார்.

இன்று காலை 6.30 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையம் சென்றடைந்த வைகோவை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.

வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அவரை தனி அறையில் அமர வைத்தனர். மலேசியா நாட்டுக்கான ஆபத்தானவர் என்ற பட்டியலில் வைகோவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை வந்து சேர்கின்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வைகோவை திருப்பி அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளனர்.