தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் விசாரணை ஆணையத்தின் செயல்பாடு குறித்து நீதிபதி கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து விசாரணை ஆணையத்தின் தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில் தமிழகத்தில் நிறுவப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, ராஜினாமா செய்த நீதிபதி ரகுபதியின் பதவிக்கு புதியதாக யாரை நியமிப்பது என்பது குறித்து வரும் 27-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.