செய்திகள்

கடற்கரை-திருமால்பூருக்கு இன்று முதல் மீண்டும் மின்சார விரைவு ரெயில்

சென்னை கடற்கரை- திருமால்பூருக்கு இன்று முதல் மின்சார விரைவு ரெயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாலை மலர்

சென்னை:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரங்கிமலை ரெயில் விபத்தில் 5 பேர் உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து மின்சார, விரைவு ரெயில் சேவை எக்ஸ்பிரஸ் பாதையில் நிறுத்தப்பட்டன. படிக்கட்டில் பயணம் செய்த பயணிகள் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதையடுத்து பரங்கிமலை ரெயில் நிலையத்தின் நடைமேடை, விரைவு பாதை தண்டவாளங்களின் சுவர்கள் பளிச்சென தெரியும் வகையில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டன. வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அந்த வழியாக அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில் அந்த பாதையில் இன்று முதல் மீண்டும் சேவை தொடங்கியுள்ளது. 11 விரைவு ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்ட நிலையில் தற்போது 7 ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

சென்னை- கடற்கரை- செங்கல்பட்டு- திருமால்பூருக்கு இன்று முதல் விரைவு மின்சார ரெயில்கள் ஓடத் தொடங்கின. அதன்படி செங்கல்பட்டு- கடற்கரைக்கு முதல் ரெயில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு வந்தது. தொடர்ந்து காலை 8.05, 8.25,, 8.50 மணிக்கு புறப்பட்டன. திருமால்பூர்- கடற்கரை காலை 7.05 மணி அரக்கோணம்- கடற்கரை காலை 7.30 மணி, கடற்கரை- அரக்கோணம் மாலை 6.13 மணிக்கு இயக்கப்படுகின்றன.

எக்ஸ்பிரஸ் பாதையில் விரைவு மின்சார ரெயில் இயக்கப்படுவதையொட்டி அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காலையில் அலுவலகங்களுக்கு செல்ல இந்த சேவை பயன் உள்ளதாக இருப்பதால் வரவேற்று உள்ளனர். காலை, மாலை பீக் அவர்சில் விரைவு மின்சார ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று சென்னை கோட்ட மேலாளர் பி.மகேஷ் தெரிவித்துள்ளார்.

படிக்கட்டில் தொங்கி கொண்டும், தோளில் பை சுமையோடும் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சென்னை கோட்டத்தில் தற்போது சில வழித்தடங்களில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இனி புதிதாக வரும் மின்சார ரெயில்கள் 12 பெட்டிகளாக இருக்கும். முதல் வகுப்பில் பயணம் செய்யும் ரெயில்வே ஊழியர்கள் டூட்டி பாஸ் வைத்திருக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகேஷ் தெரிவித்தார்.