சென்னை:
டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்கில் கடந்த 1996-ஆம் ஆண்டு, வெளிநாடுகளில் இருந்து பெருமளவிலான தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, டி.டி.வி. தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் தினகரன் ஆஜராகவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 8-ம்தேதி தினகரனை ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தினகரன், விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.